"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

செந்தில்நாதனுக்கு இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது !

நல்லிதயம் கொண்ட அன்பானவர்களே,


நமக்கு நன்கு அறிமுகம் ஆகியுள்ள சிங்கை செந்தில் நாதனுக்கு, இன்று காலை சிங்கை நேரப்படி 10.00 மணிக்கு (இந்திய நேரம் காலை 7:30 மணிக்கு) இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நுண்கிருமி (வைரஸ்) காய்சலால் நலிவுற்ற செந்திலின் இதயம், துடிப்பு எண்ணிக்கையைக் குறைக்க மூச்சு திணறலில் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துக் கொண்டிருந்தார், பிறகு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் வரை சமாளித்து வந்தார், பின்பு பேஸ் மேக்கரிலும் இதயச் செயல்பாடுகள் குறைய ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, மாற்று இதய சிகிச்சை தான் ஒரே வழி மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால் தற்காலிகத் தீர்வாக மின்கலம் மூலம் இயங்கும் செயற்கைக் கருவி வழியாக இதயம் செய்யும் இரத்த ஓட்ட செயல்பாடுகள் சீராக்கப்பட்டது. உடல் நிலையும் நன்கு தேறி வர ஒராண்டுகாலமாக பகுதி நேரமாக பணிபுரிந்தும் வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து செந்திலைத் தொடர்பு கொண்டு மாற்று இதயம் கிடைத்துள்ளதாகவும், இன்று காலை 10:00 மணிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை ஏழுமணிக்கு மருத்துவமனையில் செந்தில் சேர்ந்துள்ளார், முதல் நிலை மருத்துவ சோதனைகள் அனைத்தும் முடிந்துள்ளது. 10: 00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.

நல்லிதயங்களே, செந்திலின் இதய சிகிச்சை நல்லமுறையில் நடந்து, விரைவில் நலம் பெற உங்களுக்கு தெரிந்த வகையில் வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் செய்யுங்கள்.

கூடவே செந்திலின் இதயமாகச் செயல்படப் போகின்ற அந்த முகம் தெரியாத (மூளைச் சாவு) கொடையாளியின் ஆன்ம சாந்திக்கும், அவரின் இல்லத்தினரின் மன அமைதிக்கும் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஒருகாரணத்திற்காகத் தான் செந்தில் தனக்கான மாற்று அறுவைச் சிகிச்சை உடனே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதே இல்லை, நடக்கும் போது நடக்கட்டும் என்றே சொல்லிக் கொண்டு வந்தார்.

மணற்கேணி 2010 தற்போதைய நிலவரம் !

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையத்தளம் நடத்தும் மணற்கேணி 2010 தலைப்பை ஒட்டி, மூன்று பிரிவுகளிலும் இடம் பெற்ற தலைப்புகளுக்,கு பேரன்பும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் மொத்தம் 103 கருத்து ஆக்கங்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. இது சென்ற ஆண்டிற்கு வந்து ஆக்கங்களைவிட இரு மடங்கு மிகுதி. போட்டிக்கு வந்திருக்கும் ஆக்கங்களில் சில ஏற்கனவே வெளியான கட்டுரைகளின் மறுபதிப்பாக தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி இருக்கிறார்கள், அவற்றை போட்டி விதிமுறைகளின் படி ஏற்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தகட்டமாக இவற்றை தலைப்பு மற்றும் பிரிவு வாரியாக அவற்றின் ஆய்வு திறன் கொண்ட 10க்கும் மேற்பட்ட நடுவர்களுக்கு அனுப்பும் பணியில் இருக்கிறோம். வந்திருக்கும் ஆக்கங்கள் சில கையினால் எழுதப்பட்டவையாகவும், பிடிஎஃப் கோப்பாகவும் இருக்கின்ற காரணத்தினால் அவற்றை மறுதட்டச்சில் ஒருங்குறிக்கு (யுனிக்கோட்) மாற்றி நடுவர்களுக்கு அனுப்பும் பணி வரும் 10 நாளைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு நடந்தேறிவருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன் பிறகு நடுவர்களுக்கு கொடுக்கப்படும் கால எல்லைகள் 15 நாள் வரை எடுத்துக் கொள்ளும், ஏனெனில் நடுவர்கள் நட்பு மற்றும் தமிழ் சமூக ஆர்வம் காரணமாக இதற்காக சற்று பணியிடையே நேரம் ஒதுக்கிச் செய்யவே 15 நாள் வரை தேவைப்படுகிறது. சென்றமுறை சிறந்த ஆக்கங்களைத் தேர்ந்தெடுப்பதன் நடைமுறைகளில் சில தொய்வுகள் ஏற்பட்டன, இந்த முறை அப்படி ஆகிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் திட்டமிட்டே அதற்கேற்றவாரு சில முடிவுகள் செய்திருக்கிறோம்.

சிறந்த கட்டுரைகளுக்கும் மட்டுமின்றி, கருத்து செறிவுடன் எழுதப்பட்ட ஆக்கங்களுக்கும் ஊக்கப் பரிசுகள் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திட்டமிட்டபடி மணற்கேணி 2010 வெற்றியாளர்கள் பற்றிய முடிவு வரும் பிப்ரவரி 2011, 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். போட்டியாளர்கள் தங்கள் ஆக்கங்களை தங்களின் வலைப்பதிவுகளிலோ, இணையத் தளங்களிலோ வெளியிட்டுக் கொள்ளலாம்.

மேலும் போட்டிக் வந்த கட்டுரைகளை கருத்துப்பரிமாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில் கருத்துக்களம் அமைக்கப்பட்டு, சிறந்த கருத்துரையாடலுக்கு சிறப்புப் பரிசும் கொடுக்கப்படும், இதுபற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.


எங்களது மணற்கேணி 2010 தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அனைத்து வலைப்பதிவு திரட்டிகளுக்கும், வலைப்பதிவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் அறிவிப்புகளை நண்பர்களுக்கு தெரிவித்து ஊக்கப்படுத்திய அனைத்து தரப்பினருக்கும் நெஞ்ச்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
மணற்கேணி 2010 குழுவினர்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP